நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகம் தருவது ஹாஸ்யம் தான். அழும்போது முகத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகலின் அசைவைவிட மிகக் குறைந்த அளவே சிரிக்கும் போது அசைகிறது! “எனவே கொஞ்சம் சிரித்து தான் வைப்போமே”
1.கிராமப்புறங்களில் இன்றும் எண்ணெய் எடுக்க செக்கு மற்றும் மாட்டை உபயோகப்படுதுகிறார்கள்.
ஒரு நாள் கிராமப்புற மேம்பாட்டுதிட்டத்திற்கு மெத்த படித்த அறிவாளி வந்தார். வீட்டின் பின்னே மாடு செக்கு இழுத்துக் கொண்டிருப்பதையும், அதை ஓட்டும் ஆள் தனியே வேறொருபுறம் உட்கார்ந்திருப்பதையும் கண்டார். செக்கு ஆட்டும் ஆளைப்பார்த்து ‘நீங்கவேடிக்கை பார்க்கும் போது மாடு சும்மா நின்றுக் கொண்டிருந்தால் உனக்கு தானே நஷ்டம்’ என்று கேட்டார். அதற்கு இவர், ‘மாட்டு கழுத்திலே மணி கட்டியிருக்கிறேன். மணி சத்தம் கேட்கலைனா மாடு சுத்தலைன்னு தெரிஞ்சிடும்’ என்றார்.
விடவில்லை படித்த ஆசாமி, ‘ஒரே இடத்துலே நின்னு மாடு தலையை மட்டும் ஆட்டினா என்ன பண்ணுவே’ எனக்கேட்க, அதற்கு கிராமத்தான் ‘மாடு உங்க அளவுக்கு படிக்கல அதுக்கு இந்த அளவுக்கு உங்கமாதிரி யோசிக்கத் தெரியாது’ என்று சொன்னாராம்.
2.ஒரு சுற்றுலாத் தலத்தில் நிறைய சிற்பங்கள், மிகவும் அபூர்வமான பல சிலைகள் கலை நுணுக்கத்துடன் ஏராளமான பெரிய பெரிய சிலைகள் நிறைய இருந்தன. சிற்பங்களை கண்டு களிக்க ஒரு குழு வந்தது. சிற்பங்களைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் கூறுவதாக ஒரு கைடு வந்தார். வந்தவர்களுக்கு ஒவ்வொரு சிற்பத்தை பற்றியும் எடுத்துக் கூறி வந்தார். ஒரு சிற்பம் பெரிய வாயுடன் இருப்பதை வந்தவர்கள் கண்டனர். அது பற்றி கேட்டவுடன் கைடும் இதன் வாயில் பணத்தை போடுங்கள் என்று கூற வந்தவர்களும் பணத்தைப்போட்டு விட்டு இப்பொழுது என்ன நடக்கும் என்று கேட்டனர். அதற்கு கைடு ‘ஒன்றும் நடக்காது’ பிறகு நான் வந்து பணத்தை எடுத்துக் கொள்வேன் என்றாரே பார்க்கலாம்!
சிலரது பயணம் வேடிக்கையானது
3.ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று பைக்குள் பயணச் சீட்டை தேடி அது கிடைக்காமல் அழ ஆரம்பித்து விட்டான். அருகில் உள்ளவர்கள் ஆறுதல் கூறி, அழ வேண்டாம், டிக்கட் பரிசோதகர் வந்ததும் நிலமையைக்கூறி வேறு பயணச் சீட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆமாம்! எதுவரை செல்லுகிறீர் என கேட்க, எங்கு இறங்க வேண்டும் என்பது தெரிய தொலைந்த டிக்கட் கிடைத்தால் தானே பார்க்க முடியும் என்றானாம்.
‘உண்மையில் சற்றேறக் குறைய இதுபோல் எங்களுக்கு திருப்பதிப் பயணத்தில் நடந்தது’
ஊர் திரும்பும் நாள் அன்று, திருமலையில் இருந்து இறங்கி கீழே தாயாரை தரிசனம் செய்து விட்டு உடன் குறுகியகால அவகாசத்தில் நானும் என் கணவரும் ரயில் நிலையம் வர வேண்டியிருந்ததால் கண்ணில் தெரிந்த லாட்ஜில் கொண்டு வந்த சாமாங்களை வைத்து விட்டு உடன் பத்மாவதித் தாயாரை தரிசிக்க இரண்டு ஆட்டோவில் சென்று தரிசித்தோம். உடன் வந்த அக்கா, அத்திபேருடன் அவர்கள் மகனுடன் ஒரு ஆட்டோவிலும், நாங்கள் இருவரும் ஒரு ஆட்டோவுலுமாக தரிசனம் முடிந்து அங்கேயே அன்னப் பிரசாதம் சாப்பிட்டு விட்டு தங்கிய லாட்ஜிக்கு கிளம்பினோம்.
என் அக்கா குடும்பம் ஒரு நாள் கழித்து கிளம்புவதாக ஏற்பாடு. லாட்ஜின் சாவியை வைத்திருந்த அக்கா மகன் எங்கள் ஆட்டோ ஒட்டுனரிடம் தெரிந்த தெலுங்கில் இடத்தைக் கூற எங்கள் ஆட்டோ ஜோராக கிளம்பிவிட்டது! ஊருக்குள் வந்த ஆட்டோ வேறு ஏதோ லாட்ஜில் நிற்க, எங்களுக்கு லாட்ஜின் பெயர் மட்டும் தான் தெரியும் என்பதால் அதனைக் கூற அவர் அந்தப்பெயரில் உள்ள வேறொரு லாட்ஜின் முன் நிறுத்த எங்களுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது. கோவிலுக்குள் செல்போன் தடை செய்யப்பட்டிருப்பதால் எங்களில் யாரிடமும் செல்போன் இல்லை! போதாதிற்கு ஆட்டோ முன் ஒரு குடிகாரன் வந்து மோத, ஏகக்களேபரம். ரயிலுக்கு வேறு நேரம் நெருங்கி விட்டது. ஏரியா எது என்று தெரியாததால் வந்த வினை இது! பிறகு ஒருவழியக வந்து சேர்ந்தாம்!
நீதி:- புதிய இடத்திற்கு சென்றால் அது பற்றிய அனைத்து
விபரங்களையும் கையில் வைத்திருக்க வேண்டும்.